Wednesday, November 6, 2013

யம தீபம்

நீங்கள் யாவரும் பொம்மை  கொலுவைக்கண்டு களித்திருப்பீர்கள். ஆனால் பாத்திர  கொலுவைப் பார்த்திருக்கிறீகளா?நான் தில்லியில்  குடியேறின வருடம் தீபாவளியின்  இரு நாட்கள் முன்பு இந்தக்கொலுவைக்கண்டேன் நான் அப்போது "கரோல்பாக்" என்ற இடத்தில் இருந்தேன் . சென்னையின் தி .நகர். போன்ற ஒரு இடம் அது . பல தமிழர்கள் அங்கு குடியிருந்தார்கள். பல சர்தார்ஜிகள்  மதராசி என்றவுடன்  தங்கள் வீட்டு சில பகுதிகளை வாடகைக்கு  கொடுத்து விடுவார்கள். மதராசிகள்  நாணயமாக ஒன்றாம் தேதி வந்தவுடன் வாடகையைக் கொடுத்துவிடுவதால் அவர்களுக்கு மிக நல்ல பெயர்.தவிர தோசா,இட்லி ,சாம்பார் சட்னி  ரொம்ப ஈசியாக அவர்களிடமிருந்து பெறலாமே! கரோல்பாக்கில் அஜ்மல்கான் ரோடு சுமார் ஒரு கிமீ தூரமாவது வியாபித்திருக்கும்.
அன்று  காலை நான் பள்ளிக்கு கிளம்பினேன்.போகும் வழியெல்லாம் நிறைய மரப்பலகைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.எதுக்கு இவ்வளவு பலகை என்று எண்ணியபடி நடையக்கட்டினேன். ஆனால் பள்ளியிலிருந்து மாலை திரும்பும் போது கொலுப்படிகள் போல் அந்தத் தெரு முழுதும் பலகையால் கட்டப்பட்டிருந்தன .மரப்படிகள் நடக்க வசதியாக இடம் சற்று விட்டு அமைக்கப்பட்டிருந்தன.எல்லாமே ஐந்தடி நீளம் அளவில் இருந்தன.வியாபாரிகள் தங்கள் பொருட்களை அலங்காரமாக வைத்து விற்க இந்த ஏற்பாடாக இருக்கும் என்று நினைத்தபடியே வீடு வந்து சேர்ந்தேன் .மறு நாள் பள்ளிக்குப்போகும் போது நிறைய காகிதப்பூக்களின் சரம்,.அலங்கார விளக்குகளென்று பல இடங்கள் நிரம்பி இருக்க பலர் கூட்டம் கூட்டமாக வேலையில் ஈடுபட்டிருந்தனர்.அது என்ன ஒற்றுமை!அது என்ன உற்சாகம் !எங்கும் சிரிப்பு,.எங்கும் இனிப்பு .நான் திரும்பி வரும்போது நான் தினமும் நடக்கும்  இடம் இதுதானா என்று நினைக்கும்படி கரோல்பாக்கே  மாறி இருந்தது.ஜகஜ்ஜோதியாக எங்கும் விளக்குகள்.மரங்கள் மீதும் பச்சை விளக்கு பல்புகள் கண் சிமிட்டி மின்ன,அந்தத்தெருவில் நடக்கவே ஏதோ ஒரு திருமண விழாவுக்குள் நுழைந்தது போல் இருந்தது.அந்த  கொலுப்படிகள் முழுதும்  பாத்திரங்களோ பாத்திரங்கள்.எவர்சில்வர் என்ன ,பித்தளை என்ன.ஹிண்டேலியம் என்ன என்று  களைக்கட்டின.பெரிய பக்கெட்டிலிருந்து ஆரம்பித்து சின்ன ஸ்பூன் வரை அங்கு பார்க்க முடிந்தது ,அப்பாடி ! இத்தனை பாத்திரங்கள் விற்றுபோகுமா? தீபாவளிக்கு பாத்திரங்கள் ஏன் வாங்க வேண்டும் ?என்று பல கேள்விகள் என் மண்டையைக்குடைந்தன.தீபாவளிக்கு முதல் நாள் நான் எங்கு இருக்கிறேன் என்றே தெரியவில்லை.தெரு முழுவதும் தார் ரோடே தெரியாமல் தரி என்ற சமக்காளம் விரித்து மூடியிருந்தனர்.மழையில் நனையாமல் இருக்க மேலே முழுவதும் பந்தல் போட்டு பிளாஸ்டிக் ஷீட்டினால் மூடப்பட்டிருந்தது.வாகனப்போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.எல்லா கடைகளும் திறந்திருக்க,  நடைபாதை கொலு வியாபாரமும் களைக்கட்ட கூட்டமும் கொஞ்சம் கொஞ்சமாக வலுத்தது.குண்டூசியிலிருந்து ஆரம்பித்து அத்தனைப்பொருட்களும் அங்கு கிடைத்தன.ஒரு பக்கம் காலணி குவியல் .ஒரு பக்கம் லேடீஸ் ஹாண்பேக் குவியல் .ஷால் .ஸ்வெட்டர். தில்லி மோடா ..பல புடவைகளின் குவியல் என்று பலதரப்பட்ட குவியல்கள். ஆனால் அங்கு வரும் கும்பலை சமாளிக்க முடியாது. வேண்டுமென்று பெண்களை இடித்து இன்பம் பெறும் கும்பல், நாசுக்காக இடித்து மணிபர்ஸ் அடிக்கும் கும்பல் .கிட்ட வருவது போல் வந்து கழுத்து சங்கலியை அறுத்து ஓடும் கும்பல் என இருந்தாலும் இந்த தீபாவளி மார்க்கெட்டை காண ஒருவரும் தவறுவதில்லை. இதைத்தவிர  கோல் சக்கர் என்று சொல்லுப்படும்  நாலு வீதிகள் கூடும் இடத்தில்  பெரிய அலங்கார பந்தல் போட அழகாக என் உயரத்தில் ஒரு பகவதி வந்து அமர்வாள். "பகவதி ஜாகரண்" என்று சொல்லப்படும் இந்த நிகழ்ச்சி இரவு 10 மணிக்குத் தொடங்கி விடிய விடிய நடைப்பெறும்.மிகவும் புகழ்ப்பெற்ற திரு அனூப் ஜலோடா போன்றவர்கள் இரவு முழுவதும் தேவியின் புகழை சினிமா பாடல் மெட்டில் பாடுவார்கள். பிரசாதம்   சூஜி கி ஹல்வா என்ற ரவா கேசரியும் , பூரியும் சோலேயும் வருபவர்கள் அவ்வளவு பேர்களுக்கும் வழங்கப்படும் செய்யப்படும் பாத்திரம் கூட மிகப்பெரிய அளவில் இருக்கும் .அதைத்தூக்கி வைக்க நாலு பேர்களாவது வேண்டும்,
என் பள்ளித் தோழியிடம் இந்த பாத்திர  கொலுவைப் பற்றிக்கேட்டேன்.  தீபாவளிக்கு முதல் நாள் லட்சுமியை வரவேற்க குந்துமணி அளவு தங்கமாவது வாங்க வேண்டுமாம் .இல்லையென்றால் கொஞ்சம் வெள்ளியாவது வாங்குவது வழக்கமாம்,இது எல்லாம் முடியாத நிலைமை நடுத்தரமக்களுக்கும் ஏழைகளுக்கும் ஏற்படும் போது எதாவது பாத்திரமாவது வாங்க வேண்டுமாம் .அவரவர் சம்பாத்தியத்திற்கு தகுந்தபடி பாத்திரங்கள் வாங்கி விடுவர்.இதற்கு காரணம் 'தன் தேரஸ் "என்ற திருநாள் தான் .     தமிழ்நாட்டில் பொதுவாக 'நரகசதுர்தசி' என்று நரகாசுரனை அழித்த தினம் மட்டும்  கொண்டாடுகிறார்கள்.அத்துடன் லட்சுமி குபேர பூஜையும் சில வீடுகளில் நடக்கும்.ஆனால் வட இந்தியாவில் தீபாவளி என்றால் ஐந்து நாட்கள் கொண்டாட்டம் .தன் தேரஸ், லட்சுமி குபேர பூஜா, பாடுவா, கோவர்தன் பூஜா, பையா தூஜ் ,தான் அவைகள்.
தன் தேரஸ் தீபாவளிக்கு முதல் நாள் வரும் .இதையே தன்வந்த்ரி திரியோதசி என்றும்கூறுகின்றனர். அமிருதத்திற்காக பாற்கடலை  தேவர்களும் அசுரர்களும் கடையும் போது   பெரிய கலசம் கையில் ஏந்தியபடி தன்வந்திரி  தோன்றிய நாள் இது .பல வைத்தியர்கள்தன்வந்திரி பூஜையை செய்கின்றனர். தவிர  எல்லா வியாபாரிகளும் தங்கள் வியாபாரம் சிறப்பாக நடக்க செல்வத்துக்கு அதிபதியான லட்சுமி தேவியையும் கணபதியுடன் சேர்த்து பூஜிக்கின்றனர், ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் ஸ்ரீதேவி வருவாள் என்ற நம்பிக்கையினால் அன்று வாசல் கதவைத்திறந்தே வைத்திருக்கின்றனர் .அவளை வரவேற்க ஒருவரும் தூங்குவதில்லை.ஆனால் ஒரு குறை !  பஜன் செய்து அவளை அழைகிறார்களா என்ன? அதுதான் இல்லை 'தீன் பத்தா" என்ற சீட்டாட்டம் விடிய விடிய நடக்கும் .. ஒரு கிளப்பின் சூழ்நிலை அங்கு பார்க்க முடியும் .லட்சுமி பூஜை என்ற பெயரில் இப்படி கூத்தடிப்பதை  ஏற்றுக்கொள்ள  கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது  இதற்கு தனியாக ஒரு நாள் பாருக்கு bar போலாமே .மஜா செய்துவிட்டு வரலாமே .
தன் தேரஸ் பற்றி ஒரு கதை .மன்னன் ஹிமாவுக்கு அருமையான ஒரு மகன் பிறந்தான் அவன் ஜாதகப்படி அவன் மரணம் ஒரு பாம்பு கடியால் ஏற்படும் என்றும் அதுவும் திருமணம் ஆகி நாலாம் நாள் இது நடக்கும் என்று இருந்தது. பெற்றோர்கள் மிகவும் கவலையுற்றனர்.ஆனாலும் அவனைத்திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்ட ஒரு பெண் தான் அவனைக்காப்பாற்றிவிடுவதாக சொல்லி திருமணம் செய்து கொண்டாள்.திருமணம் ஆகி நாலாம் நாள்.அவர்களது  படுக்கை அறை வாசலில் தங்க ஆபரணங்களையும் 
வைர நகைகளும் குவித்தாள்.பின் தன் கணவனுக்கு  கதைகள் சொல்லியும் பாட்டு பாடியும் தூங்க விடாமல் செய்தாள்.வீடு முழுவதும் விளக்கு ஏற்றினாள்.யமராஜன் பாம்பின் உருவத்தில் உள்ளே நுழைய ஆரம்பித்தார்.ஆனால்  வைரம் தங்கம் எல்லாம் பளீர் பளீரென்று கண்களில் அடிக்க கண்கள்  பார்க்கும் சக்தியை இழந்தது. இதனால் மேலே வரமுடியாமல் தங்கக்குவியலின் மீதே அமர்ந்திருந்தார்.நேரம் கடந்து விடியும் நேரம் வந்துவிட்டது.உயிர் எடுக்கும் நேரம் கடந்துவிட்டதால்  பேசாமல் வந்த வழியே யமராஜன் போய்விட்டார் ,இதனால் யமனுக்கு நன்றியைத்தெரிவிக்கும் வகையில் யமதீபங்கள் ஏற்றி இரவு முழுவதும்  அணையாமல் பார்த்துக்கொள்கின்றனர்.    தங்கள் வீடுகளை முன்பாகவே பெயின்ட் அல்லது வெள்ளைப்பூசி புதுப்பித்து இந்த நாளை ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றனர்.வாசலில் அழகான ரங்கோலி என்ற வண்ணக்கோலங்கள் போட்டு அழகிய பாதங்களை அரிசிமாவினாலும் மஞ்சள் பொடியினாலும்  அலங்கரித்து மகாலட்சுமியை வரவேற்கின்றனர்.பின் ஏதாவது புதிய ஒரு பாத்திரத்தை வாங்கிவருகின்றனர். இது போன்ற உலோகங்கள்   வாங்க       அதிருஷ்டம் வரும் என்று நம்புகின்றனர்.லட்சுமி பூஜையினால் வீட்டில் இருக்கும் கெட்ட சக்தி.கண்திருஷ்டி போன்றவைகள் மறைந்துவிடும் என்ற நம்பிக்கையும் அவர்களிடம் இருக்கிறது.அவர்களைப்பார்த்து நானும் யமதீபம் ஏற்ற ஆரம்பித்தேன் யமன் தன் சகோதரி யமுனாவைப்பார்க்க வருகிறான் என்றும் அதனால் சகோதரி யமுனா விளக்குகள் வைத்து அவனை வரவேற்று அந்தத்தினத்தைக் கொண்டாடினாளாம் என்றும் ஒரு கதை உண்டு. எது எப்படியோ  .ஊரோடு ஒற்று வாழ்ந்தால்  எல்லாவற்றுக்குமே நன்மைதான் , 
எல்லோருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துகள்  

No comments: