எல்லா காளி கோயில்களிலும் பக்தர்கள் போனால் காளியைக் கர்பக்கிரஹத்தின் அருகில் சென்று தரிசிக்க முடியும் .ஆனால் ஹிமாசலப் பிரதேசத்தில் இருக்கும் காளிக்கோயில் மிக வித்தியாசமாக ஆனது . அந்தக்கோயில் இருக்குமிடம் ஷர்ஹான் என்ற
கிராமம் . இயற்கையின் எழில் சூழ ஒரு குன்றின்மேல் வெகு அழகாக அமர்ந்து அருள்புரிகிறாள் அந்தக்காளி . அவளை 'பீம்காளி' என்று அழைக்கிறார்கள். நான் கூட அந்தக்காளியைப் பீமன் பூஜித்திருப்ப்பார் அதனால் அந்தப்பெயர் வந்திருக்குமோ என நினைத்தேன் .
என் நினைப்பும் உண்மையாகவே இருந்தது . பாண்டவர்கள் இங்கே தங்கியிருந்ததாகவும் அப்போது பீமன் இந்தக்காளியைபிரதிஷ்டைச்செய்து பூசித்ததாகவும் சிலர் சொல்லுகிறார்கள்.
பன்னிரண்டாம் நூற்றாண்டில் பீம்கிரி என்று ஒருவர் வழக்கம் போல் காலை மலைப்பகுதியில் நடந்துக்கொண்டிருக்க அவர் காலடியில் ஒரு காளியின் சிலை தட்டுப்பட்டது . அதை மிக ஆர்வத்துடன் எடுத்து தன் வீட்டிற்குக் கொண்டு
வந்தார் .பின் அதற்கென்று ஒரு கோயில் கட்டி காளியைப்பிரதிஷ்டைச் செய்தார் .பின் தினசரி பூஜைக்கும் ஏற்பாடு செய்து தானும் அங்கு முழுநாளும் சேவை செய்ய ஆரம்பித்தார் . பீமகிரி அந்தக்காளியைப் பிரதிஷ்டடைச்செய்ததால் எல்லோரும்
அந்தக்கோயிலை 'பீமகிரி காளி 'என்று அழைத்தனர் .
இங்கு வரும் பூசாரி சிவப்புத்தொப்பியை அணிந்துக்கொள்கிறார்.அத்துடன் அவர் உடையும் சிவப்பு வர்ணமாக இருக்கிறது .அவர் நேர் வழியாக வராமல் கோயிலிருந்து வரும் ஒரு சுரங்கப்பாதையில் நுழைந்து காளியிடம் வருகிறார் . பின்னர் பூஜை முடித்தப்பின்
அதே சுரங்கப்பாதை வழியாக வெளியே வந்துவிடுகிறார். இப்படிச்செய்வதுதான் முறை என்று அங்கிருக்கும் ஒரு பெரியவர் சொன்னார்.
பீம்காளியைப் பார்க்க பக்தர்கள் கருவறைக்கு சிறிது தூரத்தில் அமைத்திருக்கும் ஒரு சன்னல் அருகே வரிசையாக நிற்கிறார்கள் . பின் சன்னல் வழியாகத்தான் அந்தக்காளியைத் தரிசிக்கவேண்டும் காளியைப்பார்க்க சிவப்பு தொப்பி அணிந்துக்கொண்டுதான்
வரவேண்டும் . காளி அப்படியே ரக்தவண்ணமாக அமர்ந்திருக்கிறாள்.கண்கள் முழித்தபடி உருண்டையாக இருக்கின்றன நாக்கும் வெளியே நீட்டிகொண்டிருக்கிறது சன்னல் வழியாகப்பார்ப்பதால் நேரில் அருகில் நின்று பார்ப்பது போன்று தெளிவாக இல்லை .
ஏன் அருகில் செல்லக்கூடாது என்று பலரைக்கேட்டேன் .ஆனால் விடை சரியாகக்கிடைக்கவில்லை . சிலர் காளியின் சக்தி மிகவும் அதிகமானதால் நேரில் நம்மால் தாங்கிக்கொள்ளமுடியாது என்கின்றனர்
இந்தக்காளியின் அருகில் 200 ஆண்டுக்ளுக்கு முன் பிரதிஷ்டை செய்த காளியும் இருக்கிறாள். அவள் தான் பீமன் பூஜித்த காளியாக இருக்கலாம் . அவள் அருகில் இந்த பீம்காளி எட்டுக்கரங்களுடன் அருள் புரிகிறாள் .
இங்கு வரும் பக்தர்கள் சிவப்பு அங்கியை வாங்கி காளி மேல் சார்த்த கொடுக்கின்றனர் .பக்தர்களின் எல்லா கோரிக்கைகளும் நிறைவேற்றிவைக்கிறாளாம் இந்த பீம்காளி
No comments:
Post a Comment