Thursday, March 29, 2007

இதயத்தில்...முள்!

அழகாக பிறந்தாள் என் மகள் ,
தாய்மை பூரிக்க பாலூட்டினேன்,
பிரசவ விடுமுறை முடிய ,
காரியாலயம் என்னை அழைத்தது
என் செல்லக்குட்டியின் அம்மா
இப்போது என்னைப் பெற்ற அம்மா,,
என் பால் ரவிக்கையை நனைக்க
அவள் நினைவில் கண்ணீர் பெருக,
அவளுக்காகத்தானே சேர்க்கும் பணம்,
ஆனது என் மனம் சமாதானம்
“பெண் என்றாலே நகை வேண்டும்
வரதக்ஷணைக்கு பணமும் வேண்டும்
“காற்றுள்ள போதே தூற்றிக் கொள்,
அவள் கண்கலங்காமல் பார்த்துக் கொள்,”
அவளின் தந்தை துபாயில் ,
ஆடுகிறது என் எண்ணங்கள் ஊஞ்சலில் ,
பகலெல்லாம் பாலூட்டி ,
நாளெல்லாம் சீராட்டி
பார்த்து பார்த்து சோறூட்டி
அவள் புகழைப் பாராட்டி
என் அன்னை இன்று
அவள் தாயானாள் ,
நடுவில் கணவரின் ஆசைத் தீர்க்க
ஒரு ஆறு மாதம் துபாய் போதல்
அவள் நினைப்பில் மனம் உருகி
ஓடி வந்தேன் ஆவலுடன்
என் செல்ல மகளை அள்ள
அலுப்பில்லாமல் இரு கை நீட்டி
"வா" என்று அவளை அழைக்க
"நீ வேண்டாம்..! இதுதான் என் அம்மா "
என்று முகம் திரும்பும் அவள்
என் இதயத்தில் குத்தினாள் முள்
"உன் அம்மா எங்கே ? என்று
நண்பர்கள் கேட்க
பிஞ்சு விரல் என் தாயைக் காட்ட
சாட்டையினால் விழுந்தது ஒரு அடி ,
என் அம்மா முகத்தில் பெருமிதம்
அதுவே அவளுக்கு சம்மதம்
என் தங்கத்திற்கு தங்கம் தேட
இழந்து விட்டேன் ஒருவைரத்தை
கூழோ கஞ்சியோ குடித்தால் போதும்
என் மகளின் அன்பு கிடைத்தால் போதும்..!

அன்புடன் விசாலம்

No comments: