Saturday, March 31, 2007

அவளும்...பெண்தானே...

தில்லியில் என்னுடன் இருந்து வீட்டு வேலை செய்து கொடுத்த பணிப்பெண்ணிற்கு இதை சமர்ப்பிக்கிறேன்.

அவள் பறந்து போனாளே...
அவள் ஒரு பணிப்பெண்,
ஆனாலும் எனக்கு செல்லப் பெண்,
புனனகையுடன் வருவாள்
தன் வேலையில் ஈடுபடுவாள்
அவள் வாழ்க்கை ஒரு கேள்விகுறி,
அவள் வாழ்வும் ஒரு சோகக்குறி,
அவள் வயது முப்பது,
ஆனால் உடல் முதுமை ஏற்றது,
ஐந்து குழந்தைகளின் தாயானாள்,
குடிகாரப் புருஷன் கல்லானான்,
பொறுமை பூஷணத்தின் சிலை
தாங்கினாள் அவனின் துன்புறுத்தலை
குடிகாரன் அடியையும் தாங்கினாள்,
அவனின் உடலையும் தாங்கினாள்
வயிற்று வலியால் துடிதுடிப்பாள்
கணவன் காசுக்காக அடிஅடிப்பான்,
காமுகப் புருஷன் ஒரு பக்கம்
ஐந்து மக்கள் மறு பக்கம்,
உடம்பு ஓடாய் தேய்ந்தது
ஆடி ஓடி ஓய்ந்தது,
கடவுள் கண்டார் சிந்தனையுடன்
தன்னிடம் அழைத்தார் கருணையுடன்,
காதல் மணம் கொடுத்த பலன்
தனிக்கப்பட்டாள் அழிந்தது நலன்
வைத்தியத்திற்கு பணமில்லை
புருஷனை விடவும் மனமில்லை
தைரியமாக மரணம் ஏற்றாள்,
புற்று நோய் மூலம் யமனை அழைத்தாள்
அப்பா! விடுதலை சுதந்திரப் பறவை ஆனாய்,
புருஷனின் பயமுமில்லை
காமத்தின் கசப்புமில்லை
பிற யஜமானியின் திட்டும் இல்லை
குழந்தைகளின் அழுகையும் இல்லை
நன்றிகெட்ட உலகிலிருந்து விடுதலை பெற்றாய்
பெண்ணாகப் பார்த்தேனே என்னை விட்டா போனாய்?
என்னிடம் சொல்லாமல் எங்கே நீ பறந்தாய்?
என்றைக்கும் நீ என் மனதில் நிறைந்தாய்

விசாலம்

No comments: