Saturday, March 31, 2007

என் மகன் திரும்பி வருகிறான்

அப்பா மிகவும் பரபரப்பானார்.
உள்ளே,வெளியே சலியாமல் நடந்தார்,
கண்கள் தெருக் கோடியில் தேடின
மனம் ஆனந்தத்தால் ஆடின,
முகத்திலே ஒரு பூரிப்பு
உள்ளத்திலே ஒரு லயிப்பு
வீடெல்லாம் அலங்காரம்
எங்கு திரும்பினும் தோரணம்
பல வர்ண பலூன்கள்
அணைந்து மின்னும் பல்புகள்,
அவர் அன்பு மகன் வருகிறான்,
தனியே வருகிறான்
திரும்பி வருகிறான்
திருந்தி வருகிறான்
,தந்தை நெகிழ்ந்துபோனார்,
மூத்த செல்லப் பிள்ளை,
நுழைகிறான் உள்ளே,
ஒரு கேள்விக் குறி அவன் முகத்தில்
குடைந்து எடுத்தது அவன் தலையில்,
"என்னப்பா என் கல்யாணமா?
எனக்குத் தெரியாமல் ஒரு விஷயமா?"
புலம்பித் தவித்தான் மூத்த மகன்
"இல்லை கண்ணா நீயும் மகன்,
என் இளைய மகன் வீடு திரும்புகிறான்
உன் அருமைத் தம்பி வீடு திரும்புகிறான்
தவற்றை உணர்ந்து வீடு திரும்புகிறான்
முகம் வாடிப் போனான் மூத்த மகன்
"கிழித்த கோட்டை தாண்டாமல்
நீங்களே தெய்வம் என்ற எனக்கு,
ஒரு விழாவும் இல்லையாப்பா?
கெட்டு ப்போன தறுதலைப் பையன்,
ஜெயில் போய் மானம் இழந்தவன்,
பெண்கள் கூட்டத்தில் சீரழிந்தவன்
குடியும் சூதாட்டத்திலும் தன்னையே மறந்தவன்
அவ்னுக்கா திருவிழா?
தந்தை சொன்னார்,
"நல்ல கூட்டத்தில் நல்லவனாய் இருப்பது
சிரமம் ஒன்றும் இல்லையப்பா.
கெட்ட கூட்டத்திலிருந்து திருந்தி வருவது
ஒரு பெரிய விஷயம் அப்பா.
புலிகளின் கூட்டத்திலிருந்து ஒரு ஆடு
தப்பித்து வந்திருகிறதப்பா
பக்குவப்பட்டுவிட்டது அவன் மனம்,
பக்குவப்பட்ட மனதிலே கடவுள் நுழைவார் தினம்"
கொண்டது அந்த தெரு ஒரு விழாக் கோலம்,
வாசலை அலங்கரித்தது ஒரு வர்ணக் கோலம்


விசாலம்

No comments: