Friday, April 13, 2007

தமிழ்ப் புத்தாண்டு



அன்புக் குழந்தைகளே,
தமிழ்ப் புத்தாண்டு அல்லது வருஷப்பிறப்பு ஏபரல் 14 அன்று ஸர்வஜித் என்ற பெயரில் வருகிறது, இந்த நாளில்தான் சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்குப் போகிறான். தெலுங்கு, கன்னடம், மராட்டி, கொங்கணி போன்ற பாஷை பேசுபவர்களுக்கு சில நாட்கள் முன்னதாகவே வருடப் பிறப்பு வந்து விடுகிறது, இதை அவர்கள் யுகாதி என்கின்றனர், இந்த நன்னாளிலேதான் ஸ்ரீ பிரும்மன் சிருஷ்டியைப் படைக்க ஆரம்பித்தார். இந்தப் புத்தாண்டை இந்தியாவைத் தவிர சிங்கப்பூர், மலேசியா, கம்போடியா, ஸ்ரீலங்கா போன்ற நாட்டு மக்களும் கொண்டாடுகின்றனர்.

இதை ஜோதிட வல்லுனர்கள் மற்றும் பூஜாரிகள் வினாடி, நிமிடம், மணி என்று கணக்குப் பார்த்து எப்போது சூரியன் மேஷத்திற்கு வருவான் என்று கண்டுபிடித்துப் பின் பஞ்சாங்கம் என்ற நாள் குறிப்பேட்டில் எழுதி வைப்பார்கள். அதன்படி சில சமயம் இது ஏப்ரல் 13ம் தேதி வரும், சில சமயம் ஏப்ரல்14ம் தேதியில் வரும்.
இந்த நன்னாளில் காலையில் எழுந்து ஸ்னானம் செய்து, புத்தாடைகள் உடுத்திப் பின் கோவிலுக்கும் போவர்கள். இன்று வடை, பாயசம், இவற்றுடன் கூட ஒரு விதமான மாங்காய்ப் பச்சடியும் இருக்கும். இதில் வேப்பம்பூ, வெல்லம், புளி, மாங்காய், மிளகாய் என்று கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, தித்திப்பு என்று பலவித சுவைகளுடன் கூடி இருக்கும். இது எதற்கு என்றால் நம் வாழ்க்கையிலும் தித்திப்பான சம்பவங்கள், கசப்பான சம்பவங்கள், திடுக்கிடும் செய்திகள், புளித்துப்போன விஷயங்கள் என்று பல வந்தாலும் மன பலம் கொண்டு அதை வெற்றிக் கொள்ள வேண்டும், வாழ்க்கை என்பது பலவிதமான ருசிகளுடன் இருக்கும் என்று காட்டத்தான் இந்தப் பச்சடி.
இன்றுதான் மதுரையில் திரு சுந்தரேஸ்வரர் அன்னை மீனாட்சியைத் திருமணம் செய்து கொண்டார். மதுரையில் இது மிகப் பிரமாதமான விழாவாக நடக்கும். கேரளாவில் இந்தப் புத்தாண்டை விஷு என்று அழைக்கின்றனர். கனி காண்பது என்பது மிகவும் சிறப்பான ஒன்று, அதாவது ஒரு சிவப்புத் துணியில் ஒரு பெரிய தட்டை வைத்து அதில் தங்க நாண்யங்கள், வெள்ளி, பல ஆபரணங்கள், பரங்கிக்காய், மஞ்சள் கொன்றைப்பூ, பனை இலை, தேங்காய், அரிசி, இவற்றுடன் மா, பலா, வாழை எனும் முக்கனிகளையும், இதர சில கனிகளையும் பெரிய நிலைக்கண்ணாடி ஒன்றின் முன்னால் முதன் நாள் இரவே தயாராக வைத்துக் கொள்வார்கள். பின் வீட்டுப் பெரியவர் கலை 5 மணிக்கு எழுந்து குடும்பத்தினரை ஒவ்வொருவராக அவர்கள் கண்ணைக் கட்டி அழைத்துச் சென்று, அந்தக் கண்ணாடியிலும் பின் அந்தச்சிவப்புத் துணியில் இருக்கும் பொருட்களையும் பார்க்கச் சொல்லுவார், பின் பெரியவர், சிறியவர்களுக்குத் தன் சக்திக்குத் தகுந்தாற்போல் வெள்ளிக்காசுகள் கொடுப்பார்கள். அதன் பின் பட்டாஸ் வெடித்து விருந்தும் மகிழ்ச்சியும் தான். நெற்றியில் எல்லோரிடமும் சந்தனம் கீராக இட்டு இருப்பதைப் பார்க்கலாம்.
சீக்கியர்களும் இதை பைசாகீ என்று கொண்டாடுகிறர்கள். இந்தத் தினம்தான் சர்தார் ஸ்ரீ குருகோவிந்த சிங் "கால்சா" என்ற அமைப்பை ஏற்படுத்தி அதற்குத் தேவையான நியமங்களையும் ஏற்படுத்தினார். "பாங்டா" நடனத்துடன் குருதுவரா போய்ச் சிறப்புப் பிரார்த்தனை செய்வார்கள். மாலை ஊர்வலமும் இருக்கும், பெங்காலிகளும் இதை நொபவர்ஷா என்றும் பிரபாத் பேரிஸ் என்றும் கூறிக்
கொண்டாடுகின்றனர். பெரிய கோலமும் அலங்கரிக்கின்றன.
அஸாமில் பிஹூ என்று இதை அழைக்கின்றனர் நாட்டுப் பாடல் பாடி நடனமும் ஆடுகின்றனர் "பிதா" என்ற இனிப்பைத் தயாரிக்கின்றனர். அவர்கள் உடைகளும் பலவித வர்ணங்கள் கொண்டதாக இருக்கின்றன. "பிஹுதோலீஸ்" என்ற நடனத்தில் பெரிய வாத்திய பைப் [bugle}, சங்கு, பெரிய டோல் வார்பைப் {தாரை டமட்டை} இவற்றைக் கொண்டு பாட்டு முழங்க நடனம் களை கட்டும்.
மொத்தத்தில் கொண்டாடுவது சிறிது வித்தியாசப் பட்டாலும் வசந்த ருதுவை வரவேற்று அறுவைடை முடிந்து புது நிலத்தில் விதை விதைக்கும் நாளை மகிழ்ச்சியுடன் எதிர்பார்க்கின்றனர்.
எல்லோருக்கும் என் அன்பு கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அன்புடன்
அம்மம்மா விசாலம்

No comments: